முகப்பு


402. எந்தன் மனத்தில் இன்றும் என்றும்
எந்தன் மனத்தில் இன்றும் என்றும்
உந்தன் நினைவுகள் வேண்டும்
எந்தன் வாழ்வின் செயல்களில் எல்லாம்
உந்தன் வழித்துணை வேண்டும்
தேடுகிறேன் தெய்வமே பாடுகிறேன் பரம்பொருளே
வாழத்தான் கேட்கிறேன் வேறு யாரைக் கேட்பது
உன்னைத் தானே கேட்கிறேன்

1. ஏன் பிறந்தேன் என நான் அழும் போது
தாங்கிடும் தாய்மடி வேண்டும்
வான்மழை வரம் தரத் துளிர்த்திடும் வசந்தம்
போல் ஒரு இதம் தர வேண்டும்
இமைப் பொழுதும் நீங்காமல் உனை நான் நினைத்திட வேண்டும்
இம்மையிலும் மறுமையிலும் அதுவே தொடர்ந்திட வேண்டும்
- வாழத்தான் கேட்கிறேன் வேறு

2. தொழுதிடும் காலை இளங்கதிர் போல
என் மனம் நிறைந்திட வேண்டும்
விழுந்திடும் போதும் தளர்ந்திடும் போதும்
எழுந்திடும் வல்லமை வேண்டும்
என்னுடனே நீ இருக்க யாருக்கு நான் அஞ்ச வேண்டும்
மண்ணுயிரைக் காப்பவனே மனத்தினில் நேசம் வேண்டும்
- வாழத்தான் கேட்கிறேன் வேறு